ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி இருவரும் கண்ணவேலம்பாளையம் வந்துவிட்டனர்.

இதனையடுத்து இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த பிரகாசுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரகாஷை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டு இறைச்சி சாப்பிட்டு அலர்ஜி ஏற்பட்டு பிரகாஷ் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.