தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தியிலிருந்து தீ கட்டிலில் பிடித்து வேகமாக பரவியது.

இதனால் வலி தாங்க முடியாமல் தர்மன் அலறி சத்தம் போட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தர்மனை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.