திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க 2 லட்ச ரூபாய் கேட்டனர். மேலும் முன்பணமாக ஜெயக்குமாரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாயை பெற்று கொண்டனர்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு மேலாகியும் ஜெயக்குமாரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் ஜெயக்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போதும் அந்த நிறுவனத்தினர் பதில் அளிக்காததால் ஜெயக்குமார் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகி மின்ஹாஜூதீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.