திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும்.
அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட தீவனத்தை சாப்பிட்ட பின்னர், பூஜை நடத்தப்படும்.

இந்நிலையில் கோவிலில் பொங்கல் படையல் வைத்தல் மற்றும் மாலைமாடு ஊர்வலம் ஆகியவற்றில் ஒரு சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக புகார் வந்தது. ஆனால் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த வழக்கத்தை மாற்ற முடியாது என மற்றொரு சமூகத்தினர் கூறியதால், இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே இது குறித்து தகவலறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செபஸ்டின் சந்தியாகு, பிரபாகரன் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற்று முடிந்தது.