கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டியை துவங்கி வைத்துள்ளார்.

அப்போது அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான குழு போட்டிகள் 2 நாட்களும், தனிநபர் போட்டிகள் 2 நாட்களும் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் விளையாட்டை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

வருகிற மார்ச் மாதம் 5- ஆம் தேதி கரூர் நகரத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறியுள்ளார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.