அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து 134 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்து தரையிறங்க தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஜித் அலி(46) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் நடு வானில் பறந்து கொண்டிருந்த போதே சஜித் அலிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவருடன் வந்த சகோதரர் விமான பணி பெண்களிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை தயாராக வைத்திருக்கும் படி கூறியுள்ளார். சுமார் 9:40 மணிக்கு விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் சஜித் அலியை பரிசோதனை செய்தனர்.

அப்போது நடுவானிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த விமான நிலைய போலீசார் சஜித் அலியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.