பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த விடுதியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பிரார்த்தனை நடைபெறும். இந்த நிலையில் விடுதியில் வீரபாண்டியைச் சேர்ந்த தம்பதியினர் தனது 14 வயது மகள் மற்றும் 13 வயது மகன் உள்ளிட்டோரை விடுதியில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்ற வாரம் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது 14 வயது மகள் விடுதி காப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அந்த புகாரில் பாதிரியார் சென்ற 15 நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாததால் மாலையில் பிரார்த்தனைக்கு செல்லாமல் இருந்த தனது மகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே செல்லக்கூடாது எனவும் மிரட்டி இருக்கின்றார்.

ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.