பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென பட்டாசு சத்தம் வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் மயங்கி கீழே விழுந்தான்.

இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தான். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.