மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஸ்ரேயாஷ் அஷ்டங்கர் மீது சொகுசு கார் மோதி நசுக்கிப் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் விபத்தின் கொடூரக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.

நாக்பூர் நகரில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தந்தையின் கடைக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஸ்ரேயாஷ், எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த காரின் சக்கரத்தின் கீழ் சிக்கினான்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், கார் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.

விபத்து நடந்தவுடனே, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் குடும்பத்தினரும் சிறுவன் ஸ்ரேயாஷை மீட்க முயன்றனர். ஆனால், தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுவனின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற காரின் ஓட்டுநரைக் காவல்துறையினர் உடனடியாகக் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 வயதுச் சிறுவன் ஸ்ரேயாஷின் இந்த பரிதாப உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.