செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்தோடு விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்பட மாட்டாது என்று இந்த விடியரசு அறிவித்ததை ஒட்டி வருகின்ற தைப்பொங்கலுக்கு அம்மாவின் ஆட்சி காலத்தில் வழங்கியதைப் போல குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்,  இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதேபோல் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். இந்த விடியா அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என அறிவித்தது. மேலும் ஒரு கரும்புக்கு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ஒதுக்கி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய். ஆனால் இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும்,  கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடு நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,  அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அரசு அறிவித்த கரும்புக்கான முழுத் தொகையும் விவசாயிகளும் சென்றடையாமல் இருந்தால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்றும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்த விடியா அரசை எச்சரிக்கை செய்கின்றேன். கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவதும்,இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற விடியா திமுக அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.