மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது..

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி தொடர்பாக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து இறுதி செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை உறுதி செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி தொகுதி பங்கிட்டை நிறைவு செய்துள்ளது திமுக.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் :

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், பெரம்பலூர்,
தூத்துக்குடி, தஞ்சாவூர், தென்காசி, தேனி, ஆரணி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

அதேபோல மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துறை வைகோ அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிடுகிறது.