விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைக்கு திருமணம் நடத்துவது தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபற்றி புகார் வந்தால் சமூகநல களப்பணியாளர்கள், சைல்ட் லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் சென்று விசாரிப்பார்கள். இதனையடுத்து குழந்தை திருமணம் நடந்தது உறுதியானால் அந்த குழந்தை காப்பகத்தில் தங்க வைக்கப்படும். இதனையடுத்து மணமகன், மணமகனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது ஜாமீனில் வெளிய வர முடியாத வழக்கு. எனவே அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தே விதிக்கப்படலாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.