பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சங்கல்பா சமாவேஷா’ கூட்டத்தின்போது, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொண்டர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த கார்கே, “இது தனிநபருக்கான நிகழ்ச்சி அல்ல, இது கட்சியின் நிகழ்ச்சி.

நீங்கள் இங்குக் கூச்சலிடுவதால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எந்தப் பயனும் இல்லை, அறிவில்லாத செயல்களை நிறுத்துங்கள்” என்று கடுமையாகச் சாடினார். தனிநபர் வழிபாட்டைத் தவிர்த்து, கட்சியின் கொள்கைக்காகவும் ஒற்றுமைக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தன்னுடைய 58 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய கார்கே, கட்சிதான் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது என்பதை நினைவூட்டினார். ஒழுக்கமின்மையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எச்சரித்த அவர், கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை வீடியோ ஆதாரங்களின் மூலம் கண்டறிந்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“>

 

கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டி அவ்வப்போது கட்சி மேலிடத்திற்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கார்கேவின் இந்த வெளிப்படையான கண்டிப்பு, தொண்டர்களிடையே ஒழுக்கத்தை நிலைநாட்ட கட்சி மேலிடம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.