தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒரு மாணவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, மாணவர்களின் நலனை விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் பள்ளிக்கு சென்று அங்கு பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரித்த போது உணவில் பல்லியின் தலை கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று வழங்கப்பட்ட மதிய உணவின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.