தேனி மாவட்டம் காமக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம், தமிழ்நாட்டின் வீரத்தையும் தியாகத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமைக்குரிய மகன். இந்திய ராணுவத்தின் 34 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் பணியாற்றிய அவர், 19 டிசம்பர் 2024 அன்று தென் காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகத்திலும் தோளிலும் கடுமையான துப்பாக்கிக் காயம் அடைந்தபோதும் மன உறுதியை இழக்காமல் தொடர்ந்து போராடி, ஒரு ஆபத்தான பயங்கரவாதியை வீழ்த்தினார்.

அவரது இந்த அபார வீரச் செயல் மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது 2026ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த வீரரை, தமிழ்நாடு அரசு மாநிலத்தின் சார்பில் நேரில் கௌரவித்து சிறப்பான பாராட்டு விழா நடத்துவது காலத்தின் தேவையாகும்.

தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய வீரர்களை மதிப்பதும், அவர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனின் பெருமையும் ஆகும். லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரத்தின் வீர வரலாறு இளைஞர்களுக்கு தேசப்பற்று, தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை விதைக்கும் ஒரு உத்வேகமாகும். தமிழ்நாட்டின் இந்த வீரமகனுக்கு உரிய மரியாதை வழங்கி, அவரது சாதனையை மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.