கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் குறுக்கு சாலை இடது புறம் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி ஆழ தண்ணீரில் இருந்த விவசாய கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹேமலதா மற்றும் திவ்யதர்ஷினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் எந்திரம் மூலம் காரை மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.