ஆட்டோ மற்றும் வாடகைக் கார் முன்பதிவு செயலிகளில் பயணத்தின் முடிவில் கட்டணம் திடீரென உயருவது, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்குகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி ஒன்றில், ₹112 என்று காட்டப்பட்ட கட்டணம் பயணம் முடிந்தபோது ₹142 ஆக உயர்ந்ததால், ஆட்டோ ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கட்டண உயர்வுக்குத் தாங்கள் காரணமில்லை என்று ஓட்டுநர்கள் விளக்கினாலும், செயலியின் அல்காரிதம் மற்றும் வழித்தட மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தத் திடீர் மாற்றங்களால், பயணிகளிடம் முதலில் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான சூழலில் ஓட்டுநர்களே சிக்கிக்கொள்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல், வழித்தட மாற்றம் அல்லது பயண நேரத்தில் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, செயலிகள் பயணத்தின் இறுதியில் கட்டணத்தைப் புதுப்பிப்பதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகும். இது ஓட்டுநரின் தவறாக இல்லையென்றாலும், நேரடி மோதல்கள் அவர்களுக்கே ஏற்படுகின்றன.

“>

 

இத்தகைய அனுபவங்கள் பல பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளதால், கட்டண மாற்றங்கள் குறித்த வெளிப்படைத்தன்மையைச் செயலிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஒருவேளை கட்டணத்தில் முரண்பாடு இருந்தால், நேரடியாக ஓட்டுநருடன் சண்டையிடுவதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.