சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் ராஜேந்திரன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹோட்டலில் மாஸ்டர் வேல்முருகன் ஊழியர் கார்த்திக் ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட 2 பேர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். உடனே கார்த்திக் சாப்பிட்டதற்கு பணம் தருமாறு கேட்டார். இதனால் கோபமடைந்த 2 பேரும் தகராறு செய்து தனது நண்பர்கள் 3 பேரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஹோட்டலுக்கு வரவழைத்தனர்.

பின்னர் அவர்கள் ஹோட்டல் ஊழியர்களை இரும்பு கம்பியால் தாக்கியதோடு மேஜை, நாற்காலி, உணவுப் பொருட்களை அடித்து சூறையாடினர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே படுகாயமடைந்த கார்த்திக்கும் வேல்முருகனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரான தினேஷ், அஜித் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.