சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மேல்பாடி பொன்னப்பர் தெருவில் ராஜேஷ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் ராஜேஷ் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் வேலைக்காக சென்று வருவார். நேற்று முன்தினம் வட பெரும்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் சமையல் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தன்னுடன் வேலை பார்த்த செந்தில்குமார்(43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது சென்னை வள்ளலார் நகர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து காயமடைந்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.