இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புயல், மழை போன்றவற்றில் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வபோது அத்துமீறி தாக்குவதும் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 14-ஆம் தேதி நாகை நம்பியார் நகர் மீனவர்களை  இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுகடலில் வழி மறைத்து கத்தி உட்பட பல்வேறு ஆயுதங்களில் தாக்கியுள்ளனர். இதனால் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் தற்காப்பிற்காக ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல் தொடர் தாக்குதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.