மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 42 கிலோமீட்டர் தூரம் என்ற நிர்ணயம் செய்யப்பட்ட இந்த மாரத்தான் போட்டி சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது.

இந்த போட்டியில் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரதி பானர்ஜி என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் பங்கேற்று இருந்தார். 40 வயதான இவர் ஹஜ் அலி ஜங்ஷன் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று மெரினா ட்ரைவ் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த 74 வயது முதியவரான ராஜேந்திர போரா என்பவரும் மயங்கி விழுந்தார். அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மாரத்தான் போட்டியில் இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் 22 பேர் மூச்சுத் திணறல், மயக்கம் ஆகிய காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.