ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில், இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனையான பாரதி புல்மாலியின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாரதி புல்மாலி, மைதானத்தில் தனது திறமையை நிரூபித்த போதிலும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் அவரது ஆட்டத்தை விடுத்து, அவரது தோற்றம் மற்றும் ஆளுமையைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் கொடூரமாக உருவக் கேலி (Body Shaming) செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gujarat Giants (@giantscricket)

இதுகுறித்து அந்த வீடியோவில் வேதனையுடன் பேசியுள்ள பாரதி, “நமது தோற்றத்தையும் ஆளுமையையும் வைத்து மக்கள் நம்மைத் தரம் தாழ்த்திக் கேள்வி கேட்கும்போது அது மனதளவில் பெரும் காயத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று வருடங்களாக நான் இந்த கசப்பான நெகட்டிவ் கமெண்ட்ஸை எதிர்கொண்டு வருகிறேன்; சமூக வலைதளங்களுக்குப் பின்னால் இப்படி ஒரு இருண்ட பக்கம்  ஒளிந்திருக்கிறது” எனத் தனது மன உளைச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பாரதி புல்மாலி, சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 56 ரன்கள் குவித்து அசத்தலான ஃபார்மில் உள்ளார். இந்நிலையில், டிஜிட்டல் யுகத்தில் பெண் விளையாட்டு வீராங்கனைகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆன்லைன் அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களின் மனநலம் குறித்த விவாதத்தை இந்த வீடியோ மீண்டும் கிளப்பியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த வெறுப்புப் பேச்சுகள் தன்னை காயப்படுத்தியதாகவும், ஆனால் தற்போது சக வீராங்கனைகளுடன் பேசி இதைக் கடந்து செல்லும் மனவலிமையைப் பெற்றுவிட்டதாகவும் பாரதி கூறியுள்ளார். தங்களால் மற்றவர்களின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், எதைப் பார்க்க வேண்டும் என்ற தங்களின் பார்வையை மாற்றிக் கொள்ள முடியும் என அவர் முதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மைதானத்திற்கு வெளியேயும் பெண் அதிரடி ஆட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்கள், ரசிகர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.