சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பேருந்தை ஜெகன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில் டிரைவர், பெண்கள், குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.