உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின் போது வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக மனைவி மற்றும் உறவினர்களுடன் முக்தா தேவி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள யமுனை ஆற்றில் குளிக்க வேண்டாம் என உறவினர்கள் எச்சரித்ததையும் மீறி மோஹித் ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர், நீரின் வேகமான ஓட்டத்தில் சிக்கித் தத்தளித்துள்ளார்.

தனது கணவர் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அஞ்சனா, அவரைக் காப்பாற்றும்படி கதறியுள்ளார். தனது புடவையை வீசியும், “பவுவா (கணவர்), புடவையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அலறியும் அவரைக் காப்பாற்றப் போராடியுள்ளார்.

கரையில் இருந்தவர்களும் முயன்றும் பலனளிக்கவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் மோஹித்தை மீட்டனர், ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நேர்த்திக்கடன் செலுத்தச் சென்ற இடத்தில் கணவன் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இது தொடர்பான இதயத்தை உருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் கலங்க வைத்துள்ளது.