ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும் ஸ்பெயின் அணிக்கு, அதன் நட்சத்திர இளம் வீரர் லமின் யமால் காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றுள்ளது பெரும் பலமாக அமைந்துள்ளது. பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்ற பிறகு, 19 வயதான லமின் யமால் காலில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த வியாழக்கிழமை நடந்த பயிற்சி முகாமிலும் அவர் பங்கேற்கவில்லை. இது ஸ்பெயின் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் டி லா புவென்டே, “யமாலுக்கு ஏற்பட்ட காயம் மிகவும் வலிக்கூடிய ஒன்றாக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவருக்கு ஓய்வு அளித்தோம். தற்போது அவர் சக வீரர்களுடன் இணைந்து முழு வீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் விளையாடத் தகுதியான, மிகச் சிறந்த நிலையில் உள்ளார்” என்றார். மேலும், ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்பாக, சனிக்கிழமை நடக்கும் கடைசி பயிற்சி அமர்வே வீரர்களின் இறுதித் தகுதியை மதிப்பிட மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியதற்குப் பிறகு, ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். மறுபுறம், 1978, 1986 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, தனது 4-ஆவது சாம்பியன் பட்டத்தை நோக்கியும், தொடர்ச்சியான 2-ஆவது மகுடத்தை நோக்கியும் களமிறங்குகிறது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், ஒரேயொரு கோலை மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்து ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், அர்ஜென்டினா அணி தனது நாக்-அவுட் சுற்றுகள் அனைத்திலும் கடைசி நேர கோல்களின் மூலமே த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அர்ஜென்டினாவின் பலம் குறித்துப் பேசிய ஸ்பெயின் பயிற்சியாளர், தங்களது வியூகத்தில் லியோனல் மெஸ்ஸியை மட்டும் குறிவைத்துத் தனியாக ஒரு வீரரை நிறுத்தப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்துத் தனது பழைய அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “நான் செவில்லா இளையோர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, மெஸ்ஸி விளையாடிய பார்சிலோனா அணியை எதிர்கொண்டோம். அப்போது மெஸ்ஸியை மட்டும் தடுக்க ஒரு வீரரை நியமித்தேன். ஆனால் 70-வது நிமிடம் வரை 0-0 என இருந்த ஆட்டம், அந்த வீரர் மாற்றப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மெஸ்ஸி 4 கோல்களை அடித்து எங்களை நிலைகுலையச் செய்தார். எனவே, இந்த முறை மெஸ்ஸியை மட்டும் குறிவைக்காமல், ஒட்டுமொத்த அணியாக இணைந்து அவரைத் தடுப்போம். யமால் தனியாக மெஸ்ஸியைப் போல விளையாட முயலாமல், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது” என்று கூறினார்.
