கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் காலங்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் விவகாரங்களில் சிக்கி வீட்டை விட்டு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், இதுகுறித்து இதுவரை 19 புகார்கள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராய்ச்சூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருணங்ஷு கிரி தெரிவித்துள்ளார்.

இதில் 6 சிறுமிகள் குறித்த துப்பு கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மைனர் சிறுமிகள் வயது வந்த ஆண்களுடன் செல்வது சட்டப்படி கடத்தலாகக் கருதப்படும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி வரும் காவல்துறை, காதல் என்ற பெயரில் சிறார்களை ஏமாற்றும் நபர்களுக்குச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.