சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் யாழினி, யாயினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கருப்பசாமி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து மனைவி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே செல்வதற்காக கருப்பசாமி காரை எடுக்க முயன்றார்.

அப்போது யாழினியை முன் பக்கமாக நிறுத்திவிட்டு காரை பின்னோக்கி ஓட்டி சென்றார். அதே சமயம் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்த யாயினி காரின் பின்புறம் வந்து நின்றார். இதனை கவனிக்காமல் கருப்பசாமி காரை இயக்கியதால் யாயினி படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.