மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், சுமார் 6,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கடையில் இருந்த மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை உரிமையாளர் கடையைத் திறந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
<a href=”http://

“>
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், குளிருக்கு ஒதுங்குவது போலப் போர்வையைப் போர்த்திக் கொண்டு வரும் இருவர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஷட்டரின் ஓரத்தில் அமர்ந்து லாவகமாகப் பூட்டுகளை உடைப்பது பதிவாகியுள்ளது.

பின்னர் கடைக்குள் நுழைந்த அவர்கள், டார்ச் லைட் உதவியுடன் கல்லா பெட்டி மற்றும் முக்கிய இடங்களைச் சோதனையிட்டுத் திருடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

போர்வையால் முகத்தை மூடியிருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தாலும், அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் திருடர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நகர காவல் ஆய்வாளர் (TI) அரவிந்த் டாங்கி தெரிவித்துள்ளார்.