நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிப்பதற்கு அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன்படி அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் இந்த வழிமுறைகளின் படி தங்களிடம் வரும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளில் சேர அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் ஒரு படிப்பில் சேர்ந்த பிறகு அதே காலகட்டத்தில் மற்றொரு படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இடமாற்றுச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வலியுறுத்துவதால் மாணவர்கள் இரண்டாவது பட்டப் படிப்பில் சேர முடியவில்லை. இந்நிலையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க வகை செய்யும் விதமாக தங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை அமைத்து இரண்டு படிப்புக்கான வசதிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.