திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல் அங்கு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடைய கணவர் காளிமுத்துவுக்கு தகவல் கொடுத்தார். இதுதொடர்பாக அவர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தை வைத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் கூட ஆகியிருக்காது என்று கூறப்படுகிறது. அந்த தொழுவத்தில் குழந்தையின் சடலத்தோடு தொப்புள் கொடி மற்றும் ஒரு கத்திரிக்கோலும் கிடந்தது. இதனால் அந்த குழந்தை தகாத உறவால் பிறந்த குழந்தை என்பதால் அவமானம் கருதி குழந்தையை கொன்று அங்கேய உடலை போட்டு விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.