உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவு அவர்கள் அந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளது.

மேலும் தாக்குதலுக்கு பின் 100-கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது, நீங்கள் அனைவரும் பார்த்தது போல் ரஷ்யா நேற்று இரவு உக்ரைன்  முழுவதும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கண்டனத்தையும் அமெரிக்காவின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்த அனைவருக்கும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.