யூடியூபர் புருஷோத்தம் வாஷிஷ்ட் என்பவர், இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் ஈட்டுகிறார்கள் என்பதையும், அவர்களைப் பொதுமக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள ஒரு வித்தியாசமான பரிசோதனையைச் செய்தார். இதற்காகத் தனது நண்பர் சச்சினை ஒரு பிச்சைக்காரரைப் போல வேடமிட்டு வீதிக்கு அனுப்பினார்.

நண்பன் சச்சினும் பழசான கிழிந்த உடைகளை உடுத்தி, முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தினார். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பக் கழுத்தில் டிஜிட்டல் முறையில் பணம் வாங்கும் யுபிஐ ஸ்கேனர் கார்டையும் மாட்டிக்கொண்டு, உத்தரகாண்டில் உள்ள ஹரித்வாரில் நடந்த பிரபல திருவிழாவில் மக்களிடம் யாசகம் கேட்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் நடந்து சென்று பணம் கேட்டபோது ஒரு மணி நேரத்திற்கு வெறும் 130 ரூபாய் மட்டுமே கிடைத்தது. பின்னர், சாலையோரம் இருந்த உண்மையான பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து கேட்கத் தொடங்கியதும் 4 மணி நேரத்தில் 800 ரூபாய் கிடைத்தது. நடுவில் காவல்துறையினர் விரட்டியடித்தாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக 8 மணி நேரம் பிச்சை எடுத்ததில் அவர்களுக்கு மொத்தம் 4,000 ரூபாய் சேர்ந்தது.

வீடியோவின் இறுதியில் பேசிய அவர்கள், “வெளியில் இருந்து பார்க்க இது எளிதாகத் தெரிந்தாலும், ஒவ்வொருவரிடமும் கையேந்தி நிற்பது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகுந்த சோர்வைத் தரும். எனவே யாரும் இதை ஒரு தொழிலாக நினைக்க வேண்டாம்; நேர்மையாக உழைத்து வாழும் வாழ்க்கையே நிம்மதி தரும்” என்று மக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கினர்.

“>

இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, “ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் என்றால் மாதத்திற்கு 1.20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாமா? படித்து உழைப்பவர்களை விட இவர்கள் அதிகமாகச் சம்பாதிக்கிறார்களே” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.