கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அனுசிங் என்ற மகன் உள்ளான். இதில் ஜெயஸ்ரீ தொளார் அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு ஜெயஸ்ரீ வேலைக்கு வந்துள்ளார். அங்கு இருந்த சக ஊழியர்களிடம் நல்லூரில் நடைபெறும் காலை உணவு திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

இதற்கிடையே அதே ஊரில் 100 நாள் வேலைத்திட்ட பணிக்கு சென்ற ஜெயஶ்ரீயின் மாமனார் இளைய பெருமாள் வீட்டிற்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்தார். அப்போது தனது மருமகள் தூக்கில் சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.