வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மகன் அபிமன்யு (23), படவேட்டான் என்பவரது மகன் கோகுல் (21) ஆகிய இருவரும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான 31.12.2022 அன்று இரவு சிலம்பரசன் தனது மனைவியுடன்  வீட்டில் சாமி கும்பிடுவதற்காக பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் ஒடுகத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒடுகத்தூர் அண்ணா சாலை அருகே வரும்போது மது போதையில் இருந்த அபிமன்யு மற்றும் கோகுல் ஆகிய இருவரும் சிலம்பரசனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். சிலம்பரசன் இதை தடுக்க சென்ற போது அவரை கீழே தள்ளிவிட்டனர். இதனால் சிலம்பரசன்  கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் சிலம்பரசன் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர்  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.