கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் பிறந்த 10 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் தனது சொந்த வீட்டை மஞ்சள் நிற வர்ணம் பூசி சுவர்களில் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்த கோபி கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் ஆன்லைன் பிசினஸ் செய்து வந்துள்ளார். இவர் தொழிலுக்காக பலரிடம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அரங்கூரில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்த போது கோபிகிருஷ்ணன் அதில் பங்கேற்றுள்ளார்.

அப்போது பணம் கொடுத்த ஒரு தரப்பினர் பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்தனர். இதுகுறித்து கோபி தனது மனைவியிடமும் கூறியுள்ளார். இதனையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு அன்பரசி எழுந்து பார்த்தபோது வீட்டில் இருக்கும் மற்றொரு அறையில் கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.