கரூரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, மலைக்கோவில் அருகே வள்ளுவர் உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செங்குட்டுவன் திருக்குறள் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் தனது நிறுவனத்திற்கு வள்ளுவர் என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 20 திருக்குறள்களை ஒப்புவித்து அதற்கான விளக்கத்தை மாணவர்கள் கூறினால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்படும் என செங்குட்டுவன் அறிவித்தார். இதனை அறிந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மலைக்கோவிலூர் பகுதியில் செயல்படும் செங்குட்டுவனின் பெட்ரோல் பங்கிற்கு சென்று குறள்களை ஒப்புவித்து பெட்ரோலை பரிசாக பெற்று சென்றனர்.