புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ் கால் தவறி கிணற்றில் விழுந்து காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் ரமேஷ் இருந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ரமேஷை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த ரமேஷை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.