விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி, உஷாராணி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் உஷாராணி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் மகாலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மதுரையை சேர்ந்த சுதர்சன் என்பவரை காதலித்து மகாலட்சுமி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நேற்று அருண் மகாலட்சுமியை சந்தித்து அவருடன் தகராறு செய்தார். மேலும் கோபத்தில் அருண் மகாலட்சுமியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை தடுக்க வந்த தமிழ்ச்செல்வி, உஷாராணி ஆகியோருக்கும் கத்தி குத்து விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்து விட்டார். மகாலட்சுமிக்கும், உஷாராணிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.