கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ஆம் தேதி கனகா தனது தம்பி குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தைகளுடன் பிச்சனூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

அப்போது ராஜா லட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்த கனகா வேறொரு பெண் வீட்டில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ராஜா தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனகா தட்டி கேட்டதற்கு ராஜா, லட்சுமி, ராஜாவின் தாய் சரோஜா, அதே கிராமத்தில் வசிக்கும் ராமதாஸ், இளையராஜா, சங்கீதா ஆகியோர் கனகாவை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கனகா திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.