கடவுள் முன்பாகவே பயபக்தியுடன் கரங்களைக் கூப்பி வணங்கிவிட்டு, அடுத்த கணமே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற விசித்திர சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நாக்பூரில் உள்ள இரண்டு பிரபல கோவில்களில் அடுத்தடுத்து இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த தெய்வத்தின் சிலைக்கு முன்பாக நின்று மிகவும் பக்தியோடு இரு கரங்களையும் கூப்பி கும்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு தீவிர பக்தரைப் போலத் தோற்றமளித்த அவர், அடுத்த சில விநாடிகளில் தனது உண்மையான ரூபத்தைக் காட்டியுள்ளார்.

 

சாமியைக் கும்பிட்டு முடித்த கையோடு, தனக்காக வெளியே காத்திருந்த கூட்டாளியுடன் இணைந்து கோவிலில் இருந்த உண்டியல்களை தடாலடியாக உடைத்துள்ளார். அதில் இருந்த மொத்தக் காணிக்கைப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு, இருவரும் அசாத்தியத் துணிச்சலுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள அந்த ‘பக்தி’ திருடர்களை வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.