சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை பெருமாள் கோவில் அருகே இருக்கும் டீக்கடையில் சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் கடனுக்கு டீ, சிகரெட் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சந்திரன் மறுப்பு தெரிவித்ததால் நேற்று காலை உருட்டு கட்டையுடன் கடைக்கு வந்த வாலிபர் சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் அஜித் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அஜித் சந்திரனை உருட்டு கட்டையால் தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.