கரூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 12-ஆம் தேதி மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருக்கும் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கினார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பாட்டிலை வைத்துக்கொண்டு அவர் கரூர் நோக்கி சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலை வாலிபர் எடுத்தார். அப்போது பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி கிடந்ததை கண்டு வாலிபர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தனியார் குடிநீர் நிறுவன உரிமையாளரிடம் கேட்டபோது, தொழில் போட்டியின் காரணமாக பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாக கூறினார். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாலிபரிடமும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தினரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.