ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ஜி சண்முகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சண்முகானந்தம் தனது மனைவி, மகன் உறவினர் சரஸ்வதி ஆகியோருடன் காரில் புதுக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து அவர்கள் நேற்று முன்தினம் காரில் அந்தியூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சீதப்பட்டி காலனி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே புஷ்பவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.