திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் இந்த காவல் நிலையத்தில் 1 சப்-இன்ஸ்பெக்டர், 1 தலைமை காவலர் மற்றும் 4 காவலர்கள் பணியாற்றியுள்ளனர்.

இதற்குப் பின்புறம் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2004- ஆம் ஆண்டு காவல் நிலைய கட்டிடம் நூற்றாண்டை கடந்த நிலையில், சிதலமடைய தொடங்கியது. எனவே இதற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து புதிய காவல் நிலைய கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் அருகே சார் பதிவாளர் அலுவலகமும் புதிதாக கட்டப்பட்டது.

எனவே புதிய கட்டிடங்கள் வந்தபின், இதற்கு முன் இருந்த கட்டிடங்கள் பாலடைந்த இருப்பதால், சமூக விரோதிகள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகப்படுத்தி வருகின்றன. அதன்படி பகல் நேரங்களில் அவ்விடத்தில் வைத்து மது அருந்தி, பொதுமக்களின் முகம் சுளிக்க வைக்கின்றனர். இந்த இரு கட்டிடங்கள் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள்  இதை எடுத்துவிட்டு வேறு ஏதாவது பயன்படும் வகையில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.