மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தெப்பக்குளத்தில், “தெப்பமுட்டுத்தள்ளுதல்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு தெப்பக்குளத்தின் கரையில் எழுந்தருளி, அங்கு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்காக பதினாறு கால் மண்டபம் அருகே சிறிய தேர் அலங்கரிக்கப்பட்டது.  அதில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதன் பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர் கீழ ரத வீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதிகள் வழியே ஆடி, அசைந்து நிலையை அடைந்த காட்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதன் பின் திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான தெப்ப உற்சவ நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த விழாவிற்கான  ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.