தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு  ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் ‘தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைந்துள்ள பகுதி உயரமாக உள்ளதால், மாற்றுத்திறனாளிகளால் வந்து செல்வதற்கு  சிரமமாக உள்ளது. எனவே அதை கலெக்டர் அலுவலகத்தின் கீழ் பகுதியில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் சிலர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அதில்  ‘மார்க்கையன்கோட்டை, குச்சனூர் போன்ற பகுதியில் ஒரு குறிப்பிட்ட நெல் ரகத்தை  சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சாகுபடி செய்தனர். ஆனால் அந்த சாகுபடி செய்யப்பட்ட நெல்லில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பெரும் அளவு பாதிக்கப்பட்டனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்  தரமற்ற அந்த நெல் விதைகளை தடை செய்ய வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில பிரமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பு தலைவர் அன்பழகன் தலைமையில் சிலர் கண்களை துணியால் கட்டிக் கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் இன பெண்ணை இழிவாக சித்தரித்து காவல் நிலையத்தில் உண்மைத் தன்மையை அறியாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி,  பெண்ணை இழிவு படுத்திய அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டது.