நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய ஐந்து கிராம மக்கள் சார்பாக மாசி மாத திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலைபட்டி கிராம மக்கள் செய்துள்ளனர்.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த தனிநபர் கோவில் நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி அந்த இடத்தில் மாடுகளை கட்டி அதற்கு தீவனத்தை போட்டு வைத்துள்ளார். மேலும் கிராம மக்கள் கோவிலுக்குள் நுழையாமல் இருப்பதற்காக முட்செடிகளை போட்டு ஆக்கிரமித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஆக்கிரமிப்பை கண்டித்தும், அகற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.