உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு வந்த திவாரி, வெளியில் நின்ற சிறுவனை அழைத்து விசாரித்துள்ளார். அச்சிறுவனின் பெயர் ஆரியன் மவுரியா(8) என்பதும், 3வது வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் காசியா பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய ஆரியனின் தந்தை பெயர் தர்மபிரியா மவுரியா ஆகும்.

அந்த சிறுவன் திவாரியிடம் கூறியதாவது, தன் தந்தை தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இதையடுத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போடுகிறார். இதனால் தன் தந்தை குடிக்காமல் இருக்க அனைத்து மதுக் கடைகளையும் மூடவேண்டும். அவர் குடிப்பதனால் ஒட்டு மொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. என்னை போல் லட்சக்கணக்கான குழந்தைகள் இது போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக நான் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளேன் என சிறுவன் உருக்கமாக கூறினார்.

இதனை கேட்ட காவல் உயரதிகாரி திவாரி, உன் தந்தையை அழைத்து சத்தம் போடுகிறேன் என சிறுவனுக்கு உறுதி கூறியுள்ளார். அதன்படி சிறுவனின் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து ஆலோசனை வழங்கி இனி குடிக்ககூடாது என உறுதிமொழி எடுக்குமாறு செய்துள்ளார். இவ்வாறு பொறுப்புள்ள அதிகாரியாக கடமையை செய்த திவாரி, சிறுவனுக்கு இனிப்புகள், புத்தகங்களை வழங்கியதோடு ஆரியனின் கல்வி செலவுகளை ஏற்க உதவவும் முன் வந்துள்ளார்.