சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க அனுமதி கேட்டு தானு திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலக மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது கலை மன்னன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தானு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தானு கலை மன்னனிடம் கொடுத்துள்ளார். அப்போது டிரைவராக வேலை பார்க்கும் சங்கரிடம் பணத்தை கொடுக்குமாறு கலை மன்னன் கூறியுள்ளார்.

அதன்படி தானு சங்கரிடம் பணத்தை கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன், டிரைவர் சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.