விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பாண்டி தேவி சித்ராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைமுத்து இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பாண்டிதேவியின் மகனும் உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி தேவி தனது மகனின் நினைவு நாளில் மகள் புவனேஸ்வரியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டிதேவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனது தந்தை, அண்ணன்கள், கணவன், மகன் என எல்லோரும் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வீட்டில் ஒரு ஆண் வாரிசு கூட இல்லாத நிலையில் மகளுடன் வசித்து வந்த பாண்டிதேவி வாழ பிடிக்காமல் இந்த முடிவை எடுப்பதாக உருக்கமாக எழுதியுள்ளார். இதனையடுத்து தனக்கு சொந்தமான வீட்டை விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது தாய் ஞானப்பழத்தின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்கும்படி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் தனது கணவர் இறந்த பிறகு விருதுநகர் வந்த மு.க ஸ்டாலினிடம் வருமானம் இன்றி தவிப்பதாக பாண்டி தேவி முறையிட்டுள்ளார். அதன் பிறகு தி.மு.க சார்பில் பொருளாதார உதவி செய்யப்பட்டது. சிறிது காலத்தில் அவரது மகன் மகாராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து திரு. மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பாண்டிதேவிக்கு சித்துராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் பாண்டிதேவி தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.